நாளை பாய்கிறது "சிங்கப்பெண் அதிரடிப்படை"! இவர்கள் என்ன செய்வார்கள்?

முதற்கட்டமாக 1 எஸ்பி (SP), 2 டிஎஸ்பிக்கள் (DSP), 4 பெண் இன்ஸ்பெக்டர்கள், மற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 18 சிறப்புப் பெண் காவலர்கள் இந்த அதிரடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Hero Image

சென்னை : கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய் அன்றைய தினமே தனது முதல் கோப்பாகக் கையெழுத்திட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் தான் இந்த "சிங்கப்பெண் அதிரடிப்படை". டெல்லி பயணம் உள்ளிட்ட சில காரணங்களால் மே 29-ல் நடக்கவிருந்த விழா தள்ளிப்போன நிலையில், நாளை (ஜூன் 9) மாலை 5 மணிக்கு, சென்னை எக்மோர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரம்மாண்ட விழாவுடன் இத்திட்டத்தை முதல்வர் விஜய் முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

யார் இந்த "சிங்கப்பெண் அதிரடிப்படை"?

இது சாதாரண ரோந்துப் படை (Normal Patrol) அல்ல; இதற்கென பிரத்யேகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் திறமையான பெண் அதிகாரிகளில் ஒருவரான IG கே. பவானீஸ்வரி அவர்களின் தலைமையில் இந்தப் படை இயங்கவுள்ளது.

தொடக்கக் கட்டமாக 1 எஸ்பி (SP), 2 டிஎஸ்பிக்கள் (DSP), 4 பெண் இன்ஸ்பெக்டர்கள் (Inspectors), மற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 18 சிறப்புப் பெண் காவலர்கள் இந்த முதற்கட்டப் படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த அதிரடிப்படை, உள்ளூர் காவல் நிலையங்களின் வழக்கமான ஃபைல் நகர்வுகளுக்காகக் காத்திருக்காது. நேரடியாக முதல்வர் அலுவலகத்தின் (CM Desk) நேரடி கண்காணிப்பில் இயங்குவதால், புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை பாயும்.

இவர்களின் வேலை என்ன?

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ‘Zero Tolerance’ முறையில் கையாள்வதே இவர்களின் முக்கிய நோக்கம் என கூறப்படுகிறது.

பெண்கள் கல்லூரிகள், பள்ளிகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், மற்றும் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த அதிரடிப்படை ரகசியமாகவும், நேரடியாகவும் ரோந்துப் பணியில் ஈடுபடும்.

வெறும் நேரடி பாதுகாப்பு மட்டுமல்லாமல், கல்லூரி மாணவிகளை குறிவைத்து நடக்கும் ஆன்லைன் மிரட்டல்கள், மார்ஃபிங் (Morphing) மற்றும் சைபர் குற்றங்களை உடனுக்குடன் கண்டறிந்து முடக்க பிரத்யேக சைபர் பிரிவு இவர்களுடன் இணைந்து செயல்படும்.

சிங்கப்பெண் அதிரடிப்படைக்கென பிரத்யேக நிறத்திலான நவீன வாகனங்கள் (Tactical Vehicles) மற்றும் அதிவேகத் தகவல் தொடர்பு சாதனங்கள் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழகத்தில் ஏற்கனவே 'அம்மா ரோந்து வாகனங்கள்', 'காவலன் செயலி' போன்ற திட்டங்கள் இருந்தாலும், முதலமைச்சரின் நேரடிப் பார்வையில், ஒரு ஐஜி (IG) அந்தஸ்து அதிகாரியின் கீழ், பெண்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு "Full-Fledged Tactical Action Wing" களமிறங்குவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளை பாய்கிறது "சிங்கப்பெண் அதிரடிப்படை"! இவர்கள் என்ன செய்வார்கள்?