ஏழை மக்களின் 63 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு! மு.க.ஸ்டாலின் பெருமிதம்! 

தமிழகம் முழுவதும் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வாழும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

TN CM MK Stalin

சென்னை :நேற்று (பிப்ரவரி 10) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் துறை அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் அரசு நலத்திட்டங்கள், தமிழக பட்ஜெட் ஆகியவை விவாதிக்கப்பட்டன என கூறப்பட்டது.

இதுகுறித்து முக்கிய தகவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதாக தெரிவித்து இலவச பட்டா வழங்கல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட்டார்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேருக்கும், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் வாழும் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளோம் என தெரிவித்தார்.

மேலும்,  இது தொடர்பான பணிகளை அடுத்த 6 மாதங்களில் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம் என தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12 லட்சத்து 29 ஆயிரத்து 372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என பெருமிதமாக பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

unknown node

இதுகுறித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறுகையில், “சென்னையை சுற்றியுள்ள பெல்ட் ஏரியா எனக்கூறப்படும் 32 கிமீ பரப்பளவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு 1962ஆம் ஆண்டு முதல் பட்டா வழங்ப்படாமல் இருந்து வந்துள்ளது . இதனை முதலமைச்சர் கவனித்திற்கு எடுத்து சென்றோம். அதன்படி, 29,187 பேருக்கு பட்டா வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியை அடுத்த 6 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான குழுக்கள் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் அமைக்கப்பட உள்ளது. ” என அவர் தெரிவித்தார்.