" இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!" பாகிஸ்தான் கடும் கண்டனம்!

பாகிஸ்தான் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் போர் நடவடிக்கை என்றும் இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாக். பிரதமர் தெரிவித்தார்.

Pakistan PM Shehbaz sharif say about Operation Sindoor

இஸ்லாமாபாத்: கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் 9 இடங்களில் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலானது பயங்கரவாதிகள் இருப்பிடங்களை குறிவைத்து மட்டுமே நடத்தப்பட்டது என்றும், பாகிஸ்தான் மக்கள் மீதோ, ராணுவம் மீதோ இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

இப்படியான சூழலில் தான் பாகிஸ்தான் பகுதிக்குள் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது என பாகிஸ்தான் அரசு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் இதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இது பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய போர் நடவடிக்கை என குற்றம் சாட்டினார்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் அறிக்கை வாயிலாக கூறுகையில், பாகிஸ்தானில் 5 இடங்களில் இந்தியா தாக்குதல்களை நடத்தியுள்ளது, எதிரிகளை எவ்வாறு கையாள வேண்டும் என பாகிஸ்தானுக்கு நன்றாக தெரியும்.

இந்த தாக்குதல் இந்தியாவால் திணிக்கப்பட்ட போர் நடவடிக்கை ஆகும். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உள்ளது, மேலும், உண்மையில் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிரியின் தீய நோக்கங்கள் வெற்றிபெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், பாகிஸ்தானுக்கு எதிரியை எவ்வாறு கையாள்வது என்பது நன்றாகத் தெரியும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தனது கண்டங்களை குறிப்பிட்டுள்ளார்.