திமுகவை விமர்சித்தால் தான் அடையாளம் – விஜய் குறித்த கேள்விக்கு கனிமொழி பதில்!

திமுகவை விமர்சித்தால் தான் அடையாளம் என விஜய் குறித்த கேள்விக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பதில் அளித்துள்ளார்.

tvk vijay kanimozhi

சென்னை :தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய், தனது முதல் அரசியல் பயணமான ‘மக்கள் சந்திப்பு’ பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கி, தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்தார். திருச்சி பிரச்சாரத்தில், விஜய் தி.மு.க. அரசின் செயல்பாடுகளை குற்றம்சாட்டி, தமிழகத்தின் வளர்ச்சி, சமூக நீதி, மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். குறிப்பாக, திருச்சி மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியில் அரசின் தோல்விகள் என சில விஷயங்களை சுட்டிக்காட்டி, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாததாக விமர்சித்தார்.

இந்த பிரச்சாரம், விஜய்யின் அரசியல் நுழைவை மக்களிடையே பரவலாக பிரபலப்படுத்தியது, ஆனால் தி.மு.க. தலைமை அளவில் கடும் எதிர்வினையை ஏற்படுத்தியது. விஜய்யின் இந்த விமர்சனங்கள், அவரது கட்சியின் கொள்கைகளை வலுப்படுத்துவதாகவும், ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அமைந்தன.விஜய்யின் விமர்சனங்களுக்கு தி.மு.க. தரப்பில் பல்வேறு பதிலடிகள் வந்துள்ளன.

முதலில், தி.மு.க. அமைச்சர் அன்பில் மகேஷ், விஜய்யின் குற்றச்சாட்டுகளை “அரசியல் அனுபவமின்மை” என்று கூறி, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்களை விளக்கினார். அடுத்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், விஜய் முதலில் தமிழக வளர்ச்சி குறித்து தெரிந்துகொண்டு பேச வேண்டும் என்று அறிவுறுத்தி, இந்தியாவின் 6.5% வளர்ச்சியை விட தமிழகத்தின் 11.19% வளர்ச்சியை எடுத்துக்காட்டி பதிலடி கொடுத்தார்.

அந்த வகையில், இப்போது தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்து, “திமுகவை விமர்சித்தால் தான் அடையாளம்” என்று கூறி, அவரது அரசியல் அனுபவமின்மையை விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” யார் அரசியலுக்கு வந்தாலும் திராவிட முன்னேற்ற கழகத்தை பற்றி பேசினால் மட்டும் தான் அவர்களுக்கு ஒரு அடையாளம் கிடைக்கும் என்பது மிகவும் தெளிவான ஒன்று. எனவே அதனால் தான் எங்களை எல்லோரும் விமர்சனம் செய்கிறார்கள்” என பதில் அளித்துவிட்டு சென்றார்.